Archives: ஜனவரி 2025

சொல்லும்படி நெருக்கப்படுதல்

“இயேசு உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. அவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறார்"  ஜான் டேனியல்ஸின் கடைசி வார்த்தைகள் அவை. அவர் ஒரு வீடற்ற மனிதனுக்குப் பணத்தைக் கொடுத்து, அந்த இறுதி வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்ட சில நொடிகளில், அவர் ஒரு வாகனத்தில் மோதி உடனடியாகக் கொல்லப்பட்டார். ஜானின் வாழ்க்கையை நினைவூட்டும் ஆறுதல் கூட்டத்திற்கான அழைப்பிதழில் பின்வரும் வார்த்தைகள் இருந்தன: “அவர் அதிகமான மக்களைச் சந்திக்கும்படியான வழிமுறையைக் கண்டுபிடிக்க விரும்பினார், அதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், தேவையோடிருந்த ஒரு மனிதனுக்கு உதவ முயன்றபோது, உலகையே சந்திக்கும் ஒரு வழிமுறையைத் ​​​​தேவன் அவருக்குத் தந்தார். அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த செய்தியை எடுத்துச் சென்றன, மேலும் இது நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பலரைச் சென்றடைந்தது."

ஜான் டேனியல்ஸ் ஒரு பிரசங்கியாக இல்லாவிட்டாலும், இயேசுவைப் பற்றி பிறருக்கு வலிந்துபோய் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பவுலும் அப்படித்தான். அப்போஸ்தலர் 20-ல், எபேசுவில் உள்ள சபை  மூப்பர்களிடம் பிரியாவிடை பெற்றபோது, நற்செய்திக்கான தனது ஆர்வத்தை அப்போஸ்தலன் வெளிப்படுத்தினார்: “என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (வ.24).

இயேசுவின் மன்னிப்பு மற்றும் புதிய வாழ்க்கை பற்றிய நற்செய்தியானது  பிறருடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஏற்றது. சில விசுவாசிகள் மற்றவர்களை விடச் சுவிசேஷத்தை விளக்குவதில் திறமையானவர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், அதன் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை  அனுபவித்த அனைவரும் தேவனின் அன்பின் கதையைச் சொல்ல முடியும்.

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

பரிசுத்தமாகுதல்

உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.

உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.

இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.

தேவன் நமது திட அஸ்திபாரம்

உடைந்துவிழக்கூடிய சமையல்கட்டு மற்றும் சோபித்துப்போன சுவர்களுடன் இருந்த எங்கள் வீட்டைப் புதுப்பிப்பது அவசியம் ஆனது. அதின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டபின், கட்டுமான பணியாளர்கள் புதிய அஸ்திபாரத்திற்குத் தோண்டத் தொடங்கினர். சுவாரசியம் ஆரம்பித்தது.

அவர்கள் தோண்டுகையில்; உடைந்த தட்டுகள், 1850 களின் சோடா பாட்டில்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் போன்றவை அகப்பட்டன.

நாங்கள் ஒரு குப்பை மேட்டின்மேல் எங்கள் வீட்டைக் கட்டியிருந்தோமா? யாரறிவார். ஆனால் முடிவில் எங்கள் பொறியியலாளர் எங்கள் வீட்டு அஸ்திபாரங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும் இல்லையேல் சுவரில் வெடிப்புகள் தோன்றும் என்றார்.

உறுதியான வீடுகளுக்குத் தரமான அஸ்திபாரங்கள் வேண்டும். இது நமது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இஸ்ரவேலர்கள் தங்களின் சத்துருக்களால் அசைக்கப்படுகையில், ஏசாயா அவர்களுக்காக ஜெபித்தார் (ஏசாயா 33:2-4). ஆனால் அவர்களின் பெலன் வீரத்தாலோ ஆயுதங்களாலோ உண்டாகாமல், தங்கள் வாழ்வைத் தேவன் மீது கட்டுவதால் மட்டுமே உண்டாகும். தீர்க்கதரிசி, “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (வ.6) என்றார். இயேசுவும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவருடைய ஞானத்தின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டுபவர்கள் வாழ்க்கையின் புயல்களினூடே நிலைத்திருக்கலாம் என்று உபதேசித்திருந்தார் (மத்தேயு 7:24-25).

நமது வாழ்வில் மூர்க்கம், அடிமைத்தனம் அல்லது திருமண பிரச்சனைகள் போன்ற விரிசல்கள் தோன்றுவது; நமது அஸ்திபாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதின் அடையாளங்கள். நாம் தவறான இடத்தில் பாதுகாப்பை நாடினால் அல்லது இவ்வுலகத்தின் ஞானத்தை மட்டுமே பின்பற்றினால், நாம் உறுதியற்ற அஸ்திபாரத்தின்மேல் இருப்போம். ஆனால் தங்கள் வாழ்க்கையைத் தேவன்மீது கட்டுபவர்களோ அவருடைய பெலனையும், அனைத்து பொக்கிஷங்களையும் அடையலாம் (ஏசாயா 33:6).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.